Wednesday, February 8, 2012

நான் கண்ட நீதிபதி- ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி

கல்வியும் செல்வமும் ஒன்று சேராது என்று சிலர் சொல்வர். இக்கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. கல்வியும், செல்வமும், கனிவான  பேச்சும், அழகிய பண்பாடும், இரக்க மனப்பாண்மையும், ஈகைகுணமும், இவை அனைத்தும்  ஒரு சேர அமையப் பெற்ற ஒருவரை நாம் வாழும் சமகாலத்தில் நான் கண்டேன். ஆம் அவர் தான் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி.

இவர் படிக்கும் காலத்தில், தம் பிள்ளைகள் ‘இவரைப்போல் படிக்க வேண்டும்’ என, எங்கள் உற்றார் சொல்வர். இவர் உயர் பதவிகளை அடைந்த காலத்தில் தம் பிள்ளைகள் ‘இவரைப் போல் உயர வேண்டும்’ என எங்கள் உறவினர் சொல்வர்.  ‘வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும்’ என இப்போது எல்லோரும் சொல்வர். 

செல்வந்தர்கள் பலருக்கு செல்வச் செருக்கு இருக்கும். பெரும் தொழில் அதிபருக்கு மகனாகப் பிறந்து செல்வச் செழிப்பில் வாழ்ந்தும் ‘செல்வச் செருக்கு’ என்னும் வார்த்தைக்கு இவருக்கு இன்று வரை பொருள் தெரியாது.

படித்துப் பட்டம் பெற்ற பலருக்கு கர்வம் இருக்கும். உயர் கல்வி பயின்ற இவரிடம் கர்வத்தை கடுகளவும் எவரும் காணமுடியாது.
உயர்பதவி வகிக்கும் பலரிடம் ஆணவமும் அகம்பாவமும் இருக்கும்.  ஆனால் உயர்நீதி மன்ற நீதிபதியாக, புகழின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இவரிடம் அமைதியும் அடக்கமும் தான் இருக்கும்.

அனைவரையும் மதிக்கும் அழகிய பண்பாடு, அனைவரும் மதிக்கும் இந்த அற்புத மனிதருக்குக் கைவந்த கலை. இது கொஞ்சம் அதிகப் புகழ்ச்சி அல்லவா? என்று கேட்பவர்கள் இவரைப் பற்றித் தெரியாதவர்களாக இருக்கும். 

உறவினர் இல்லங்களுக்கு வருகை தரும்போது இவர் கேட்கும் முதல் விஷயம் குழந்தைகள் படிப்பைப் பற்றித் தானிருக்கும். படிக்கும் பிள்ளைகளை மிகவும் உற்சாகப் படுத்துவார். அதிலும் குறிப்பாக உயர்நிலைக் கல்வி கற்கும் காலத்தில் தொடர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர அதிகமதிகம் வலியுறுத்துவார். 

பொருளாதார ரீதியில் பின் தங்கிய பல மாணவர்களுக்கு மேற்கல்வியைத் தொடர பொருளாதார உதவிகளைச் செய்துள்ளார். இன்றளவும் தொடர்ந்து செய்து வருகின்றார். இவர் மூலம் பயனடைந்த பல மாணவ மாணவியரும் மற்றும் அவர்கள் தம் பெற்றோரும் இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

மார்க்க வணக்க வழிபாடுகளில் மிகவும் பேணுதலானவர்.சில ஆண்டுகட்கு முன்னர்  புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்.
எந்த நேரமும் சிரித்த முகத்துடன் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரிடமும் அன்பொழுகப் பேசுவார். தம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி யார் வந்து உதவி கேட்டாலும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்து கொடுப்பார்.

உயர்பதவியில் இருப்பவர்கள் சிறப்பு விருந்தினராக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப் பட்டால் பகட்டும் ஆடம்பரமும் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருகை தருவர். ஆனால் நிகழ்ச்சியின் ஆடம்பரத்திற்காக அல்லாமல் அவசியத்திற்கே முக்கியத்துவம் அளிப்பார்.


(தமிழ் நாடு கலாச்சாரப் பேரவையின் சிறப்பு விருந்தினராக குவைத்தில்)


(திருமங்கலம் அருகே கப்பலூர் கிராமத்தில் குழந்தைகள் விழாவில் சிறப்பு விருந்தினராக)

தம் உறவினர்களில்  சாதாரணமானவர்கள் வீட்டுக்குக் கூட சர்வ சாதாரணமாக வந்தமர்ந்து இயல்பாகப் பேசி அவர்கள் இதயத்தைக் குளிர வைப்பார்.
 தாம் வகிக்கும் பதவி காரணமாக தொலைதூர ஊர்களில் இருந்தாலும், தம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் இயன்றவரை வந்திருந்து சிறப்பித்து, அழைத்தவரை கண்ணியப்படுத்துவார்

சில ஆண்டுகளுக்கு முன்னர் அய்யம்பேட்டையில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியொன்றில், சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்ட போது, கூடிநின்ற பெரும் கூட்டத்திற்கு மத்தியில் என்னிடம் வந்து ‘தம்பி உங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் எனது இரு மகன்களுக்கு ஆதில் என்றும் ஆகில் என்றும் பெயர் சூட்டியுள்ளேன். இவற்றின் பொருள் என்ன? சரியான உச்சரிப்பென்ன?’ எனக் கேட்டு தெளிவு படுத்திக் கொண்ட போது கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் இந்த மாபெரும் அறிஞர் ஒரு சாதாரணமானவனாகிய என்னை கௌரவப் படுத்திய நிகழ்ச்சி, என்றென்றும்  எமக்கு நினைவிருக்கும்.

‘உயர்நீதி மன்ற நீதிபதி’  என்னும் மிக உயர்ந்த பதவி வகித்தாலும், பரம்பரைச் செல்வச் செழிப்பில் மிதந்தாலும், உயர் மட்டத்தில் மேன்மக்களோடு வாழ்ந்தாலும், உற்றார் உறவினர், உற்ற நண்பர்கள், ஊர்மக்கள், ஏழை எளியோர் எல்லோரிடமும் சகஜமாகப் பேசி, அனைவரின் சுக துக்கங்களிலும் பங்கு கொண்டு, அனைவரிடமும் நற்பெயர் எடுத்து அனைவர் இதயங்களிலும் இடம் பிடித்து, பிடித்த இடத்தை இன்றளவும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் நீதிபதி அவர்கள் எல்லா நலமும் பெற்று இறையண்புக்கு உரியவராக வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன். 


(மேலத்திருப்பூந்துருததி மத்ரஸா மன்பவுல் ஹிதாயா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக)











திருப்பந்துருத்தி பாப்பு ஹஜ்ரத்

மேலத்திருப்பந்துருத்தி வாழ் முஸ்லிம்களில் கடந்த இரண்டு தலைமுறையினருக்கு பாப்பு ஹஜ்ரத் அவர்களைத் தெரியாமலிருக்க முடியாது. பெரியப் பள்ளிவாசல் தலைமை இமாமாகவும் மதரஸா மன்பவுல் ஹிதாயாவின் தலைமை ஆசிரியராகவும் அரை நூற்றாண்டு காலம்  அதாவது 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய இந்த மாமேதையை யாரால் மறக்க முடியும்?

பாப்பு ஹஜ்ரத் என்றும், பாப்புபாய் ஹஜ்ரத் என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்த மாமேதையின் இயற்பெயர் அப்துல்லாஹ் ஹஜ்ரத். ஜனாப் அப்துல் மலிக், மௌலவி முஹம்மது மன்சூர், மெளலவி முஹம்மது   அத்ஹர் ஆகியோரின் தந்தையாகிய இப்பெரு மேதை  வசித்தது பெரியப்பள்ளிவாசல் தெருவின் 57 ஆம் எண் வீட்டில்.

எண்ணற்ற அறிஞர் பெருமக்களைத் தன்னகத்தே கொண்ட பேறு பெற்ற நமதூர் இந்த அறிஞரையும் ஏற்றிப் போற்றியது என்பதை மறுப்பதற்கில்லை.
 
முஅத்தின் இகாமத் சொல்லத் தொடங்கும்போது முன் வரிசையில் ஓரமாக அமர்ந்திருக்கும் ஹஜ்ரத் அவர்கள் எழுந்து, மிஹ்ராபை சென்றடைவதற்குள் கண்இமைக்கும் நேரத்தில் தலைப்பாகை கட்டுவார்களே! நேரில் கண்டு ரசித்தவர்களுக்குத்தான் அந்த நேர்த்தி தெரியும்.

ராஜநடை என்று சொல்லக் கேட்டிருப்போம் ஆனால் எந்த ராஜாவின் நடையையும் நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் நடையழகை பார்த்தவர்களுக்குத் தான், 'ராஜ நடை' என்னும் வார்ததையின் பொருள் புரிந்திருக்கும்.
 
தெருவில் அவர்கள் நடந்து வரும்போது, திறந்திருக்கும் வீட்டுக் கதவுகளும் சன்னல் கதவுகளும் மூடிக்  கொள்ளும். வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருக்கும் பெரியவர்கள் கூட எழுந்து இறங்கி வந்து தெருவில் நின்று கொள்வர். இவ்வளவுக்கும் அவர்கள் நடக்கும் போது வலப்புறம் இடப்புறம் எங்குமே திரும்ப மாட்டார்கள். அவர்களின் பார்வை தரையை நோக்கி மட்டுமே இருக்கும்.
 
வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு வரும்போது  அவர்கள் அணியும் நீண்ட அங்கி அழகு. மிக நேர்த்தியாக அவர்கள் அணியும் தலைப்பாகை தனி அழகு. கம்பீரமாக பள்ளிவாசலில் அவர்கள் நுழையும் அழகே அழகு

கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஏகத்துவக் காற்றை நாமெல்லோரும் சுவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்காத அந்தக் காலகட்டத்திலேயே அவர்களால் இயன்ற அளவு மூடப்பழக்கங்களை கண்டித்திருக்கிறார்கள்.  கல்யாணப் பந்தலுக்கு கால்நடுவது போன்ற கழிசடைச் செயல்களுக்கெல்லாம் பாத்திஹா ஓதக் கூப்பிட்டால்  வரமாட்டார்கள்.

இமாமாக நின்று தொழுகை நடத்தும்போது, தக்பீர் கட்டும்போதும், ருகூவின் போதும், சஜ்தாவின் போதும் சரியான ஏற்ற இறக்கத்துடன்  அல்லாஹ் அக்பர் சொல்லும் அழகை இது வரை வேறு எந்த இமாமிடமும் நாம் கண்டிருக்க முடியாது. அதிலும் கடைசி இருப்பில் அமரும்போது  சொல்லும் அல்லாஹ் அக்பர் மூலம், தாமதமாக வருபவர் அது கடைசி இருப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

புனித இரவுகளில் பள்ளியில் நடைபெறும் 'ராத்தீபு' என்னும் திக்ரு மஜ்லிஸை பாப்பு ஹஜ்ரத் அவர்கள் வழிநடத்தும் விதமே தனி. ராத்தீபைத் தொடங்கி வைத்து இருவரிசகளுக்கும் நடுவில் நடந்து வந்து அனைவரும் ஒரே சீராகச் சொல்கின்றனரா? என கவனிப்பார்கள். சரியாகச் சொல்லாதவர்கள் முன்பு நின்று அவர் சரியாகச் சொல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். இப்போதெல்லாம் திக்ரு மஜ்லிசில் சிறுவர்களைத் தான் காணமுடிகிறது. ஆனால் அந்தக்  காலகட்டத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை கூட்டத்தில் பள்ளி நிரம்பி வழியும்.

வயதில் மூத்த பெரியவர்கள் மட்டுமல்ல வசதி படைத்த செல்வந்தர்களும் கூட ஹஜ்ரத் அவர்களின் கட்டளைக்கு,  மகுடிக்கு மயங்கிய நாகம் போல் கட்டுண்டு கிடப்பார்கள். இப்படிப்பட்ட ஹஜ்ரத்மார்களை இவர்களுக்குப்பின் இதுவரை இந்த ஊர் கண்டதில்லை.

50 ஆண்டு காலம் ஒரே பள்ளியில் இமாமாகவும் குர்ஆன் போதிக்கும் ஆசிரியராகவும் தொடர்ந்து பணிபுரிந்த அவர்கள், மிகக்குறைந்த வருமானத்தில் தன்மானத்துடன் காலம் கழித்திருக்கிறார்கள். 3 ஆண்கள் 7 பெண்கள் ஆக 10 குழந்தைகள் நிறைந்த அந்தக் குடும்பம் வல்ல இறைவனின் மாபெரும் மறைமுக பரக்கத்தால் எப்போதும் களைகட்டியிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் ஹஜ்ரத்மார்கள் மலேசியா, சிங்கப்பூர் என்று தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள பயணம் புறப்படுவார்கள். ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் தம் வாழ்நாளில் ஒருபோதும் ஹஜ் பயணத்தைத் தவிர வேறெந்த வெளிநாட்டுப் பயணமும் மேற்கொண்டதில்லை. தன்மானத்தை இழந்து எந்த செல்வந்தர் முன்பும் கைகட்டி நின்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் ஒரே ஒரு முறை மலேசியா சிங்கப்பூர் சென்றிருந்தால் அந்த நாடுகளில் வாழும் நமதூர்க்காரர்கள் மட்டுமே இலட்சக் கணக்கில் வாரிவழங்கி ஹஜ்ரத் அவர்களைக் குளிர வைத்திருப்பர்கள்.ஏனெனில் அனைவருமே ஹஜ்ரத் அவர்களிடம் குர்ஆன் பயின்ற மாணவர்கள் தான். ஆனால் இந்தத் தன்மானச் சிங்கம் ஒருபோதும் யாரிடமும் தலைவணங்கி பழக்கப்பட்டதில்லை.

ஹஜ் என்பது வசதி படைத்த செல்வந்தர்கள் மட்டுமே நிறைவேற்றக் கூடியது. சாமானிய மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து தம் வாழ்நாட்களைக் கழித்த இந்த ஹஜ்ரத் அவர்களும் அவர் தம் துணைவியாரும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றைப் பெற்றதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.ஏனெனில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவன் வல்ல இறைவன் அல்லவா!

நமதூரின் நல்ல மனம் படைத்த இரு தனவந்தர்கள் முறையே பாப்பு ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்கள் தம் துணைவியாருக்கும் தாங்கள் பொறுப்பேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ள வைத்தார்கள்.  இறையடி சேர்ந்து விட்ட அவ்விரு நல்லடியார்களின்  பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் ஹாஜிகளின் கூட்டத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பானாக. ஆமீன்.

பெரியப் பள்ளிவாசலின் இமாமாக மட்டுமின்றி நமதூரின் மத்ரஸா மன்பவுல் ஹிதாயாவில் திருக்குர்ஆனைக் பயிற்றுவிக்கும் பேராசிரியராகவும் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் பணியாற்றினார்கள்.

சற்றொப்ப அரை நூற்றாண்டு காலம் நமதூர்  பெரியப் பள்ளிவாசல் சுற்று வட்டாரத்தில் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான  ஆண்களும் பெண்களும் இன்று திருக்குர்ஆனைத் திருத்தமுற பிழையின்றி ஓதுகிறார்கள் என்றால் அந்தப் புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் கண்ணியமிகு பாப்பு ஹஜ்ரத் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

அல்லாஹ்வின் திருமறையை அழகுற ஓதும் அனைத்து உள்ளங்களும் அந்த மாமேதையை நினைக்காமலிருக்க முடியாது. நமதூரில் இன்றளவும் குர்ஆனை  ஓதிக் கொண்டிருக்கும் புண்ணியர்களின் நன்மையில் ஒரு பகுதி இந்த கண்ணியத்திற்குரியவருக்கு இறைவனிடம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

மாணவ மாணவியருக்கு திருக்குர்ஆனைப் பயிற்று வித்த இந்த மாமேதை அத்தோடு றிறுத்திக்  கொள்ள வில்லை.  தமது குழந்தைப் பருவத்தைக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளாமல் வீணாக்கி கைசேதப் பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பக்கம் தம் கவனத்தை திருப்பினார்கள்.

ஆம் தமிழகத்தின் எந்த ஊரிலும் இல்லாத ஒரு நடைமுறையை நமதூரில் ஏற்படுத்தினார்கள், ஆம். அது தான் 'தர்த்தீலுல் குர்ஆன்' என்னும் ஓர் அதிஅற்புதத் திட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் ரஜப் மாதம் முதல் பிறையில் தொடங்கி சுமார் இரண்டு மாத காலம் இரவு இஷாத் தொழுகைக்குப் பின்னர் பள்ளியில் வைத்து ஆர்வமுள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திருக்குர்ஆனை பிழையின்றி ஓதப் பயிற்சி அளித்தார்கள். அதன் மூலம் பயன் பெற்ற பெரியவர்களும் இளைஞர்களும் ஏராளம்.

 இந்த மாமேதையின் நன்முயற்சியில் உருவான இந்த நல்லத் திட்டத்தை இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது இந்தப் பேரறிஞரை ஒருபோதும் நமதூர் ஜமாஅத்தினர் மறக்கவில்லை என்பதற்கு ஓர் அத்தாட்சி.

திருக்குர்ஆனை ஓதக் கற்கும் ஆரம்ப மாணவ மாணவியருக்குப் பயன்படும் விதத்தில் அரபி மொழிப்பாடத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் கற்பிக்க பாப்பு ஹஜ்ரத் அவர்கள் உருவாக்கிய 'தஃலீமுல் கவாயித்' என்னும் சின்னஞ்சிறு கையேடு அரபி மொழி போதனையில் ஓர் அரிய சாதனை எனலாம். நமதூரில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இன்றளவும் அரபி ஆரம்பப் பாடசாலை மாணவ மாணவியருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமது சொந்த அனுபவத்தின் மூலம் உருவாக்கிய இந்த அற்புத நூலின் வெளியீட்டு உரிமையை, தாம் வாழும்போதே நமதூர் முஸ்லிம் ஜமாஅத்துக்கு மனமுவந்து அர்ப்பணித்த இந்த மாமேதை பெருமைக்கும் புகழுக்கும் அப்பாற்பட்டவர்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகள் எடுத்துச் செல்ல எளிதாக அலிஃ பே அட்டையை வடிவமைத்த பெருமையும் இந்த அறிஞரையே ச்சாரும்.

ஸிம்துஸ்ஸிப்யான், ஃபராயிலுல் முஃமினீன், துஹ்ஃபத்துல் அத்ஃபால்,  போன்ற அரபுத் தமிழ் நூல்களை வாசிக்க ஆரம்பப் பாடத்தைக் கற்றுத்தரும் 'அரபுத்தமிழ் பாடம்' என்னும் நூலையும் இவர்கள் தான் உருவாக்கினார்கள். இந்த நூல்கள் எல்லாம் இவர்கள் மறைவுக்குப் பின் மறுபதிப்புச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

ரமளானில் தராவீஹ் தொழுகைக்குப் பின் நமதூரில் வழக்கமாக ஓதப்படும் துஆக்களைத் தொகுத்து 'தராவீஹ் தொழுகை' என்னும் சிறு நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை 'முஸ்லிம் வீட்டார்' என்னும் பெயரில், சுவரொட்டி போல பெரிய பிரசுரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மத்ரஸாவில் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். தவறு செய்த மாணவர்களுக்குத் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். இருந்தாலும் எந்தப் பெற்றோரும் அது குறித்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனெனில், பாப்பு ஹஜ்ரத் அவர்களின் கண்டிப்பும், தண்டணையும், நியாயமானதாகத் தானிருக்கும் என்பது அனைத்துப் பெற்றோருக்கும் தெரியும்.ஊரையே நடுங்கவைத்த நிர்வாகிகள் கூட பாப்பு ஹ்ரத் அவர்களிடம் கனிவோடும் பரிவோடும் தான் நடந்து கொள்வர்.

ஐவேளைத் தொழுகை நடத்தும் இமாமாகவும், மத்ரஸாவின் ஆசிரியராகவும் நீண்ட நெடுங்காலம் அவர்கள் பணிபுரிந்த போதும்,  உடல்நிலை காரணமாகவோ சொந்த அலுவல் காரணமாகவோ இவர்கள் விடுப்பு எடுத்து யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.

மேலத்திருப்பந்துருத்தி வரலாற்றில் எத்தனையோ ஆலிம்கள் இடம் பெற்றிருக்கலாம் ஆனால் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து, ஆயிரமாயிரம் அறிஞர் பெருமக்களை உருவாக்கி விட்டு, அமைதியாய் நமதூர் கப்ருஸ்தானில் மீளாத்துயில் கொண்டுள்ள இந்த மார்க்க அறிஞருக்காக நமதூர் மக்களாகிய நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஒன்று ஒண்டு.

மேலத்திருப்பந்துருத்தி வாழ் மக்களே! மேன்மைமிகு முஸ்லிம்களே! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு  மிக அருகாமையில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த அறிஞரின் மண்ணறைக்குச் சென்று அன்னாரின் மறுமைப் பேற்றுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

அரபுநாடுகளில் வாழும் அனபர்களே! விடுப்பில் நீங்கள் தாயகம் வரும் போதெல்லாம் ஒரு முறையேனும் இவர்களின் கப்ரை சியாரத் செய்து இவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.

இறைவா! உனது இன்பத் திருமறையை திருத்தமுடன் ஓத எங்களுக்குப் பயிற்சி அளித்த எங்கள் மேன்மை மிகு ஆசான் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மண்ணறை வாழ்வை மகிழ்வாக்கி வைத்து, மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைத்து, அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் கூட்டத்தில் எங்கள் உஸ்தாத்  அவர்களையும் சேர்த்து வைப்பாயாக ஆமீன்.
 
கட்டுரை ஆக்கம்: சங்கைக்குரிய பாப்பு ஹஜ்ரத் அவர்களின் பணிவுள்ள மாணவன் 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா'

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும், தீர்வு என்ன?

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
---------------------------------------------------------------------
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.
***
கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்
சத்தியமார்க்கம்.காம்
இதுதான்இஸ்லாம்.காம்
இஸ்லாம்கல்வி.காம்
http://palanibaba.blogspot.com
http://a1realisam.blogspot.com
http://masdooka.blogspot.com
http://majinnah.blogspot.com
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.
---------------------------------------------

Tuesday, February 7, 2012

வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே

உலக வரைபடம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மற்ற எல்லா நாடுகளையும் போல் வளைகுடா நாடுகளும் அந்த வரைபடத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால் எத்துனை பேருக்கு இந்த வளை குடா நாடுகளைப்பற்றி அப்போது தெரியும்? மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம்களின் புனித நகரங்களாக இருப்பதால் இவ்விரு நகரங்களைப் பற்றி வேண்டு மானால் முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இவ்விரு நகரங்களையும் உள்ளடக்கிய சவூதி அரேபியா என்ற நாட்டைப் பற்றிக் கூட முழுமையாக அறிந்தவர் மிகச் சிலரே. 
எண்ணெய் வளம் என்னும் மாபெரும் பொக்கிஷம் இந்த பாலைவன மணலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட போது அகில உலகமும் தன் பார்வையை அரபு நாடுகளின் மீது பதித்தது. அகில உலகமும் எண்ணெய் உபயோகத்திற்கு ஆட்பட்டபோது அதன் வளத்தை வறண்ட அரபுப் பாலைவனத்தின் அடியில் உருவாக்கி உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக முஸ்லிம்களை ஆக்கிவைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். 
1970 களில் வெளி உலகத்துக்குத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்ட வளைகுடா நாடுகள், வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை விட அதிக முன்னேற்றத்தை ஒரு பத்தாhண்டு காலத்தில் வளைகுடா நாடுகள் அடைந்தன என்றால் அது மிகையாகாது. 
வளைகுடா நாடுகள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை செயல் படுத்து வதற்குத் தேவையான பொருளாதார ஆற்றல் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கப் பெற்றாலும், மனித வள ஆற்றலுக்கு கைகொடுத்த பெருமை மிக்கவர்களில் இந்தியர்களாகிய நம் பங்கு முக்கியமானது என்று சொல்லலாம். 
துவக்கத்தில் பர்;மா ரங்கூன் போன்ற நாடுகளையும், அதன் பின்னர் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் வளப்படுத்திய பெருமைக்குரியவர்களாகிய நம்மைச் சென்ற நூற்றாண்டில் வளைகுடா நாடுகள் தம் வாசற்கதவுகளைத் திறந்து வைத்து ஆரத்தழுவி வரவேற்றதையும், இன்றளவும் தொடர்ந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதையும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். 
இன்று நாம் வாழும் செழிப்பான வாழ்வும், நமது பொருளாதார வளமும், வளைகுடா வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த பயன்களே. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற எத்தனையோ சகோதரர்கள் கற்பனையிலும் கண்டிராத வளமான வாழ்க்கை வாழ்வது இறைவன் நமக்களித்த இந்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தினால் தான் என்றால் அது மிகையல்ல. 
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றால் விழி பிதுங்கி நின்ற நமக்கு வளை குடா நாடுகள் தம் வாசற்கதவைத் திறந்து வைத்து வரவேற்ற போது இன் முகத்தோடு ஏற்றுக் கொண்டோம். வளை குடா நாட்டில் அடியெடுத்து வைத்த பின்னர் தான் நம்மில் பெரும்பாலானோரின் பொருளாதார வளம் மேம்பாடு அடைந்தது.கற்பனையில் கூட நாம் நினைத்துப் பார்த்திராத எண்ணற்ற வசதிகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரமே. 
பெற்றோரை, உற்றாரைப் பிரிந்தோம், மனைவியுடன் வாழவேண்டிய இல்லற வாழ்க்கையை மறந்தோம். கொஞ்சிக் குலாவ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் பாசம் நமக்குக் கிடைக்காமற் போனது. இவையெல்லாம் உண்மை தான். பல சுகங்களைப் பெறுவதற்காக சில இழப்புகளை சந்திக்கத்தான் வேண்டும். அனைத்து சுகங்களையும் ஒருங்கே பெற்ற யார் தான் இந்த அவனியில் இருக்கின்றார்? 
பொதுவாகவே வறுமை தான் மனிதனை சில சமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமே. பொருளாதாரத்தில் ஒருவன் ஏற்றம் பெற்றால் மற்றவைகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. பொருளாதாரத் தேவை நூறு சதவிகிதம் நிறைவு பெற்றதாக திருப்தி அடைந்த மனிதன் உலகில் யாரும் இல்லை என்றாலும், தமது அத்தியாவசித் தேவைகள் பூர்த்தியடைந்தவர்கள் பலருக்கும் இந்த வளை குடா வாழ்க்கை ஒரு வரமே. 
மண் குடிசைகள் மாளிகைகளாக உருவெடுத்தன. மண் வீட்டில் கழித்த நாட்கள் நமக்கு இப்போதும் மறந்து விடவில்லை. ஆனாலும் இறைவனின் பெரும் கிருபையால் வசதிமிக்க மாடி வீடுகளில் இப்போது வசிக்கிறோமே. இதற்குக் காரணம் வளைகுடா வாழ்க்கை அல்லவா? வளைகுடாவில் வந்து மண் சுமந்தோம் என்றாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் மண் சுமக்கத் தேவையில்லாத அளவுக்கு அவர்களை மாடி வீடுகளில் வாழச் செய்து அவர்களின் துயர் துடைத்தோமே. 
உடுத்த ஒரு துணிக்கு மாற்றுத் துணி இல்லாமல் சிரமப்பட்ட காலமெல்லாம் இப்போது போய்விட்டது. புத்தாடை என்றால் நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தான் அதுவும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நமது பெற்றோர் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த ஆடைகளை வேண்டா வெறுப்பாக அணிந்தோம். சக நண்பர்கள் அணிந்த சட்டைகளை ஏக்கத்துடன் பார்த்தோம். இன்று விதவிதமான ஆடைகளை அணிகிறோம். 
கட்டிய மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க இதயம் முழுக்க ஆசை இருந்தும் இருக்கின்ற பணம் போதாத நிலையில் இதயத்தை கல்லாக்கி சாதாரணப்புடவை வாங்கிக் கொடுத்தோம். இன்று அவள் விரும்பியபடி விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்து அந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நம் அன்புக் கண்மணிகளுக்கு வகை வகையான உடைகளை வாங்கிக் கொடுக்கிறோம். 
குளிர் சாதனப் பெட்டியும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும், ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துபவை என்ற நிலை மாறி இன்று நம் அனைவரின் வீடுகளையும் இந்த ஆடம்பரப் பொருட்கள் அலங்கரிக்கின்றன. பாழாய்ப் போன சீரியல்களில் மயங்கிப் போனவர்களை விடுங்கள், பயன்மிக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வழிவகுத்த பயனுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள் நமக்கு எப்படி வந்தன? இதற்கெல்லாம் தேவையான பொருளாதார வளம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?

மேற்கல்வி கற்க வசதி இல்லாமல் ஆரம்பக் கல்வி கற்றதோடு நமது வாழ்வு அஸ்தமித்து விட்டாலும் நம் அன்புக் குழந்தைகளை இன்று மேற்கல்வி வரை தொடர வைத்தோமே! கல்வி வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் நம் குழந்தைகளளை இலட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியில் கல்லூரிகளிலும் பட்டம் பெற வைத்தோமே இதற்கெல்லாம் பொருளாதாரம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா? 
முஸ்லிம்கள் நலனுக்காகப் பாடுபடும் எத்தனையோ இயக்கங்கள் அவர்களின் செயல்பாடுகளைச் சீரிய முறையில் செயல்படுத்தத் தேவையான மிகப் பெரும் பொருளாதார உதவிகளை வளைகுடா நாடுகளில் வசிக்கும் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் வாரி வாரி வழங்கி வருகின்றோமே. தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்கள் இதனைக் கொண்டு பயன் பெறுகிறர்hகளே பயன் பெற்ற நெஞ்சங்கள் வளைகுடாவில் பணிபுரியும் நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார்களே இதற்காகவாவது நாம் சில தியாகங்களைச் செய்தால் தான் என்ன? 
புனித ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இயக்கங்களும் கடமையான ஃபித்ராத் தொகையை வசூலித்து பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் மகிழ்ச்சியாகப் பெருநாள் கொண்டாடி மகிழ்வதற்காக அனுப்பி வைக்கிறார்களே. நமது சமுதாயம் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செலுத்துகிறோமே. இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அல்லவா? 
இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இங்கு நடைபெறும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டனர். அவரவர் தம் தாயகத்துக்கு விடுமுறையில் செல்லும் போது தத்தம் குடும்பத்தினருக்கும் உண்மையாண இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தம் குடும்பத்தினரையும் திருத்தினர். அதற்கான அத்துனை வாய்ப்புகளையும் நமக்கு இந்த வளைகுடா வாழ்க்கை தானே ஏற்படுத்தித் தந்தது. 
தமிழகத்தின் சில ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்து கூலி வேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தங்கள் வாழ்நாட்களைக் கழித்தவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வந்து தமது கடின உழைப்பால் அபரிமிதமான பொருளீட்டி இன்று இறைவனின் பேரருளால் வாழ்வாங்கு வாழ்கின்றனர் இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இவர்களுக் கிடைத்த வரமல்லவா? 
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இயங்கி வரும் எத்தனையோ இஸ்லாமியக் கல்வி கூடங்கள் ஒரு காலத்தில் மிகவும் சிரமத்துடன் நாட்களை நகர்த்தின. அந்தக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்று பின்னர் வளைகுடா நாடுகளுக்கு வந்த, முன்னாள் மாணவர்களில் கொடைத்தன்மை மிக்க எண்;ணற்றோர் செய்த உதவிகள் மூலம் இன்று அந்தக் கல்விக் கூடங்களில் பல மிக நல்ல நிலையில் இயங்குவதுடன் ஏராளமான மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவே இதுவும் இறைவன் நமக்களித்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே. 
பல்வேறு குண நலன் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நமது மாறுபட்ட குணங்களை மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும், இந்த வளைகுடா வாழ்க்கை நமக்கு பயிற்சியைத் தந்தது. பக்குவத்தை அளித்தது. பெற்றோருக்கு அடங்காமல் தான்தோன்றித் தனமாக தம் வாழ்க்கையைக் கழித்த எத்தனையோ இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டனர். கட்டுப்பாடான இந்த வாழ்க்கை அவர்களின் எதிர் காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வழி வகுத்தது. 
நமக்குத் தேவையான உணவை நாமே சமைத்துக் கொள்ளும் போதும், நமது துணிகளை நாமே துவைத்துக் கொள்ளும் போதும் நம் வீடுகளில் நம் தாயோ மனைவியோ உணவு சமைக்கவும் துணி துவைக்கவும் படும் சிரமங்களை நம்மால் உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அதன் மூலம் அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பும் பாசமும் அதிகரித்தது. 
தத்தம் இல்லங்களில் தமது துணிகளை மட்டுமின்றி தமது மனைவியின் துணிகளையும் துவைத்துக் கொடுத்து மனைவியிடம் நற்சான்று வாங்கிய நல்ல கணவன்மார்களை விட்டு விடுவோம். அப்பாடா! இப்போது நமது துணியை மட்டும் துவைத்தால் போதும் என்று மகிழ்ச்சியில் திளைப்பவர்களும் இருக்கிறார்கள். ('அனுபவம் பேசுகிறது' என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்) அப்படிப் பட்டவர்களுக்கும் வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே. 
தம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைகளை காரணம் காட்டி வளை குடா வாழ்க்கை ஒரு சாபம் என்று சொல்லக் கூடிய பலரும் இன்னமும் வளைகுடாவில் வாழ்ந்துக் கொண்டு தான் நாக்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் சொல்பவர்களை யாரும் நிர்ப்பந்தப் படுத்தி வளைகுடாவில் வாழச் சொல்ல வில்லையே. இதனைச் சாபம் என நினைப்பவர்கள் தாராளமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லட்டும். அவர்களை யார் தடுத்தது? அவர்கள் தாங்கள் இந்த வரத்தை அனுபவித்துக் கொண்டே சாபம் என்று கூப்பாடு போடுகின்றனர். 
இதனைச் சாபம் என்று நினைப்பவர்களே தயவு செய்து உங்கள் தாயகங்களுக்குச் சென்று விடுங்கள். வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தை அனுபவிக்க இன்னும் இலட்சக் கணக்கானோர் தாயகத்தில் காத்திருக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு வழி விடுங்கள். 
இன்னும் ஏராளனமான சமுதாயப் பணிகள் போதிய பொருளாதாரமின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நாமும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஈட்டும் பொருளாதாரத்தில் எண்;ணற்ற ஏழைகளை வாழவைப் போம் என்ற நல்ல நோக்கத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வருவார்கள். அவர்களின் பொருளாதாரா உதவியால் அந்தந்த நாடுகளில் வாழும் அனைத்து சமுதாயத்தினரும் அளப் பெரும் நன்மைகளை அடையட்டும்.

சில வருடங்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு தாங்கள் மனம் திருந்தி (?) விட்டதாகச் சொல்லி பயணத்தை முடித்துக் கொண்டுச் சென்றவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவழித்து முடித்த பின் மேற் கொண்டு கடன் வாங்கிவிட்டு, வாங்கிய கடனை அடைப்பதற்காக தம் முன்னாள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மறுபடியும் ஒரு விசாவுக்காக ஏற்பாடு செய்யச் சொல்வதைக் கண்கூடாகக் காண்கிறோம். 
இவ்விதம் சாபம் என்ற கட்சியிலிருந்து வரம் என்ற கட்சிக்கு இடம் மாறியவர்கள் எத்தனையோ. வரம் என்ற கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த வகை மூலம் இன்னும் கூடிக் கொண்டுதான் போகின்றது. இவர்களைக் கேளுங்கள் தாங்கள் அறியாமல் சாபம் என்று சொன்னதற்காக கைசேதப் படுவது மட்டுமின்றி வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்று குன்றின் மீது ஏறி நின்று குரலை உயர்த்திச் சொல்வார்கள். 
குஜராத்தில் நம் இனத்தவர் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்கள் சூரையாடப்பட்டு வன் கொடுமையை அனுபவித்துத் திக்கற்றவர்களாக திசை தெரியாமல் தத்தளித்தபோது கோடிக் கணக்கில் வாரி வழங்கி அவர்களின் துயர் துடைத்த பெருமை வளைகுடா வாழ் சகோதரர்ளைச் சாரும். சாதி மத வித்தியாசமின்றி வாரிக் கொடுத்த வளைகுடா வாழ் நெஞ்சங்களை வாழ்த்திய அந்த குஜராத் நெஞ்சங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று வாயாரச் சொல்வார்கள். 
கோவையில் ஒரு இனவெறிக் கும்பல் கோரத்தாண்டவம் ஆடி அப்பாவி மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தியும், சூரையாடியும் நிர்மூலமாக்கிய போது, பொருளாதாரா ரீதியாக அந்நகர மக்களுக்குப் பேருதவி புரிந்தவர்களில் அதிக பங்களிப்பை நல்கியவர்கள் வளைகுடா வாழ் சகோதரர்கள் அல்லவா? வழங்கியவர்களும்,இந்து முஸ்லிம் என்று பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். அதைப் பங்கிட்டுக் கொடுத்தவர்களும் அவ்விதம் பேதம் பார்க்காமல் கொடுத்தார்கள். அந்தக் கோவை வாழ் மக்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று மனமாரச் சொல்வார்கள்.
இந்த நூற்றாண்டில் இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று தான் இணைய தளம் என்னும் அற்புதமான அருட்கொடை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துக் கொள்ளவும், தெரிந்துக் கொண்ட கருத்துக்களைப் பலருக்கும் எடுத்துரைக்கவும் மிக அருமையான ஊடகமான இஸ்லாமிய இணைய தளங்களும், மற்றும் வலைப்பதிவுகளும், 
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்தும், உண்மையான இஸ்லாத்தை உலகறிய உரத்த குரலில் முழங்கும் இணைய தளங்களும், மற்றும் வலைப் பதிவுகளும்,
அவரவர் தனிப்பட்ட முறையில் தத்தம் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் இஸ்லாமிய வலைப்பதிவுகளும் இண்டர் நெட்டில் மலிந்துக் கிடக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை என்பதை இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுடன் அதிகத் தொடர்புடைய பலரும் அறிவர்.
தூய இஸ்லாத்தை தரணியெங்கும் வாழும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தவும், பலரையும் பயன்பெறச் செய்யவும் காரணமாக அமைந்தது கூட நமக்குக் கிடைத்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.
வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதற்கு அடுக்கடுக்காக இன்னும் பல காரணங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் சாபம் என்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே காரணம் இல்லற வாழ்க்கையின் இளமை இங்கேயே பாழாகி விட்டது என்பது தான். மீதமுள்ள அனைத்துக் காரணங்களையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். 
எதிர்காலத் திட்டங்கள் சரியான முறையில் தீட்டப்படாமல் காலமெல்லாம் வளைகுடாவிலேயே கழிக்காமல் அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்தி வருமானத்துக்கு ஒருவழியை ஏற்படுத்திக் கொண்டு தத்தமது நாய் நாடுகளுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கலாமே. கட்டுரையின் தலைப்பு வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பது தான். தலைப்பு நிரந்தர வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பதல்ல. அப்படிப் பார்த்தாலும் சாபம் எனக் கூறுபவர்கள் கூட தங்களின் எதிர்கால வருமானத்துக்கு ஒரு வழியைத் தேடிக் கொள்ளவும், சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பாகிய வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதை மனமார ஒப்புக் கொள்வார்கள்
.நம்மில் பலர் வறுமை நீங்கி வளவாழ்வு வாழ்வதற்கும், நம் எதிர்காலச் சமுதாயம் சிறந்து விளங்கிட நம்மால் இயன்றவரை நம் பங்களிப்பை நல்கியதற்கும், நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டதற்கும், நமது பழக்க வழக்கங்களைப் பண்படுத்திக் கொண்டதற்கும், நம் சமுதாய இயக்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதற்கு பொருளாதார ரீதியில் நாம் பேருதவி புரிவதற்கும், இப்படி எத்தனை எத்தனையோ நற்காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணமாகிய நமது வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்களித்த வரம் தான்.

வறுமைக் கோட்டுக் கீழ் வாழுகின்ற எண்ணற்றோர் தாயகத்தில் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் வளமான எதிர்காலக் கற்பனைகளோடும் வாடுகின்ற ஏராளமானோர் வளைகுடா வாழ்க்கை என்னும் கொழுக் கொம்பு நமக்குக் கிடைக்காதா? பற்றிப் பிடித்துக் கொண்டு முன்னேறி வர மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கின்றனர். சாபம் என நினைப்பவர்களே சற்று ஒதுங்கி வழிவிடுங்கள். வரம் என நினைப்பவர்கள் வந்து அனுபவிக்கட்டும்.
கட்டுரை ஆக்கம்: மஸ்தூக்கா

புகழ்வதற்கு அதிகத் தகுதி உடையவர்

உறவினர் இல்லத் திருமண விழா ஒன்றில் சிலர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பேச்சு தவ்ஹீதின் பக்கம் சென்றது. பொதுவாகவே ஏகத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய எண்ணத்தில், எப்போது வாய்ப்பு கிடைக்கும் ஏகத்துவக் கொள்கையை எல்லோருக்கும் எடுத்தியம்புவோம் எனக் காத்திருப்பார்கள் அல்லவா? அவ்வகையில் இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

எங்கள் உறவினர் மத்தியில் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் மிகவும் நற்பெயர் பெற்ற எனது நெருங்கிய உறவினர் தமது நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றி புகழ்ந்து அறிமுகம் செய்து செய்துக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயங்களைச் சொல்லி இறுதியில் 'ஆனால் இவர் நஜாத்' என்று முடித்தார். என்னைப்பற்றி உயர்வாகச் சொன்ன அனைத்துக்கும் நான் தகுதியானவனா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னை (இவர்கள் மொழியில் நஜாத் நமது மொழியில்) தவ்ஹீத் என்று அறிமுகம் செய்தது மட்டும் எனக்குப் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தவ்ஹீத் என்று சொல்வதில் தான் பெருமை அடைய முடியும் அல்லவா!

பேச்சு களைகட்டத் தொடங்கியது. எனது உறவினராகிய அவர் தொடர்ந்தார். தனது மைத்துனர் துபாயில் ஒரு பெரிய ஷெய்கிடம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? எனக் கேட்டாராம், அதற்கு அந்த ஷெய்க் 'நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது?' என பதில் சொன்னாராம். அதற்கு இவர் எங்கள் தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது' எனச் சொல்கிறார்கள் என்று சொன்னாராம்.

இப்படி ஒரு செய்தியைச் சொன்ன இவரும், துபாயில் ஷெய்கிடம் பத்வா கேட்ட இவர் மைத்துனரும் பாமரர்களல்ல. நன்றாகப் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள், வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்கள், இறையச்சம் உடையவர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் கூட இன்னும் தவ்ஹீத் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க பாமர மக்களை நாம் குறைபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.

எனக்கு ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. 'குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று பண்டிதர் அல்ல பாமரரிடம் கேட்டாலும் 'பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுப்பது?' என்று தான் பதில் சொல்வர். கையில் வைத்திருக்கும் பாலைக் காண்பித்து 'இந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாமா?' எனக் கேட்டால் அந்தப் பாலை பரிசோதனை செய்து நல்ல பால் தானா அல்லது கெட்டுப் போனதா? பசும் பாலா, கள்ளிப்பாலா, விஷம் கலந்த பாலா நல்ல பாலா என்பதை யெல்லாம் உறுதி செய்த பின்னர் தானே இந்தப் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா கூடாதா என முடிவு செய்ய இயலும்.

அது போல நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? என்று அவர் கேட்டதை விட, எங்கள் தமிழ் நாட்டில் ரபீவுல் அவ்வல் மாதம் 12 நாளும் பள்ளிவாசலிலும் வீடுகளிலும் சுப்ஹான மௌலிது என்று ஓதுகிறோம். அந்த மௌலிதுப் புத்தகம் இது தான் என்று சுப்ஹான மௌலிது கிதாபையும் காண்பித்து அதை ஓதுவதற்காக கூலிக்கு ஆள்பிடித்து, கும்மாளம் அடிக்கிறோம் என்று விலா வாரியாக விளக்கிச் சொல்லியிருந்தால் அந்த ஷெய்க் சுப்ஹான மௌலிது கிதாபைப் படித்துப் பார்த்து விட்டு கிழித்து வீசியிருப்பார்.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது? என்று துபாய் ஷெய்க் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஒப்புவித்த அந்த எனது உறவினர் அவர்கள், அன்று நாங்கள் அமர்ந்து உரையாடிய அதே ஊரைச் சேர்ந்தவர். சரி இந்த ஊரில் நபி (ஸல்) அவர்கள் எப்படி புகழப்படுகிறார்கள் எனப் பார்ப்போமா?

தஞ்சையை அடுத்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது. இவ்வூரில் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக ரபீவுல் அவ்வல் 12 நாட்களும் பள்ளிவாசலில் மௌலிது ஓதி இரவில் தினமும் தப்ருக் என்ற பெயரில் சாதாரண இனிப்புப் பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ரபீவுல் ஆகிர் 12 நாட்களும் முஹ்யித்தீன் ஆண்டவர்(?) மௌலிது ஓதி தினமும் இரவில் அனைத்து மக்களுக்கும் கமகமக்கும் நெய்ச்சோறு நிறையவே வழங்கப்படும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

ரபீவுல் அவ்வல் மௌலிது விழா வெறும் பாத்திஹாவுடன் சிம்பிளாக முடிந்து விடும். ரபீவுல் ஆகிர் முஹ்யித்தீன் மௌலிது விழா ஊர் முழுக்க தோரணம் கட்டி, பல்லாயிரம் படி சோறாக்கி பள்ளிவாசலில் வைத்து விநியோகித்து, நான்கு கொடி தூக்கி நகர் முழுதும் வலம் வந்து, இந்த ஊர்க்காரர்கள் கொண்டாடுகிற அழகே அழகு?

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாதுன்னபிக்கு அரசாங்கம் விடுமுறை அளித்ததனால் தான் இவர்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடம் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் மீலாது தினத்தன்று இவர்கள் ஊர் பள்ளிக் கூடம் விடுமுறை விட்டதிi;லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் பிறந்த நாள் அன்று அந்தக் காலத்திலிந்தே பள்ளிக் கூடம் எல்லாம் விடுமுறை நாளாகும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அயல் நாடுகளில் வாழும் இந்த ஊர்க்காரர்கள் பலரும் தங்கள் விடுமுறை காலத்தை கொடிச் சீலை? என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரு விழாவில் கலந்து கொள்வதற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்வாhகள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாது நபிக்கு தங்கள் விடுமுறை காலத்தை மாற்றி வைத்து இந்த ஊர்க்காரர்கள் யாரும் அரபு நாடுகளிலிலிருந்து வந்ததாகத் தெரிய வில்லை.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

இதையெல்லாம் படிப்பவர்கள் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் மெளிலிதுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் மௌலிதை சிறப்பாக நாம் ஓதச் சொல்வதாகவோ, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாளுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுங்கள் என்று நாம் சொல்வதாகவோ தயவு செய்து நினைத்து விட வேண்டாம். இரண்டையுமே மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கிறோம். இவை எதுவுமே இஸ்லாத்தில் உள்;ளவை அல்ல என்றும், மிகப் பெரும் பாவங்கள் என்றும் சொல்கிறோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காட்டித் தராத அனைத்து விழாக்களும் வழி கேடுகள். அனைத்து வழிகேடுகளும் நரகப் படுகுழிக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

ஆக்கம் : மஸ்தூக்கா


கலாச்சார ஊடுருவல்

இணையத்தில் இஸ்லாம்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகம் ஒரு மாபெரும் புரட்சியைக் கண்டது. ஆம் அது தான் இணையப் புரட்சி. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இப்புரட்சி பரவியது. அனைத்து வகை மக்களிடமும் இப் புரட்சி தன் முத்திரையைப் பதித்தது.

இணையப் புரட்சி தோன்றிய பின்னர் தான் கணிணியின் உபயோகம் வெகுவாக வளர்ந்தது. அதற்கு முன் வரை அரசு அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணிணிகள் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் அளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்தது இணையப் புரட்சிக்குப் பின்னர் தான்.

உலகளாவிய அளவில் தேசங்கள், இயக்கங்கள்;, மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பயன்பட்ட இந்த ஊடகம் தனி மனிதனுக்கும் பயன்பட ஆரம்பித்தபோது இதற்காகவே காத்திருந்தது போல் முஸ்லிம்களும் தமது ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்ப இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் வார்த்தைகளை இணைய தேடுதலில் இட்டு தட்டினால் எண்ணற்ற இணைய தளங்கள் நம் பார்வையில் வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.

கணிணியைப் பயன்படுத்தவும் இணைய தளங்களில் உலா வரவும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காலம். இனிய தமிழில் இஸ்லாத்தைப் பரப்பவும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இணைய உலகில் எடுத்து வைக்கப்படும் குற்;றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும் ஏராளமான இணைய தளங்கள் தம் பணியை இனிய தமிழில் செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ்.

தமிழ் இணைய உலகில் மார்க்கச் சேவை புரியும் இணைய தளங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை ஏகத்துவக் கொள்கையை எடுத்துவைக்கும் சிறந்த இணைய தளங்களாகத் திகழ்வதும், ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏகத்துவக் கொள்கைளை எடுத்துரைப்பதில் தமது பங்களிப்பை நல்கி வருவதும் மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்.

பத்திரிகைகளும் மற்றும் தொலை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்ற இஸ்லாமிய உலகச் செய்திகளை உடனுக்குடன் தருகின்ற பல்வேறு இணைய தளங்கள் ஒரு வகையில் சமுதாயத்துக்கு தொண்டு செய்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

இளைய சமுதாயத்தின் இதயங்களில் வக்கிர எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தரம் கெட்ட இணைய தளங்களுக்கு மத்தியில் நாகரீகத்துடன் நல்ல பண்பாட்டை வளர்க்கும் இஸ்லாமிய இணைய தளங்கள் நல்ல இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இஸ்லாத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள இஸ்லாமிய இணைய தளங்களைத் தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் களங்கம் கற்பிக்கக் களம் இறங்கிய சில கயவர்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்து தங்கள் முயற்சிகளில் படுதோல்வியைச் சந்தித்த பின்னர் இப்போது இணைய தளம் என்னும் இந்த நவீன ஊடகத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாமிய கருத்துக்களை தலைப்புகளாகத் தந்து திருமறை வசனங்களையும் திருநபியின் மணிமொழிகளையும் தங்கள் விருப்பத்திற்கு வளைத்தும் திரித்தும் எழுதி ஆலகால விஷத்தை சுவையான இனிப்புப் பண்டங்களைப் போல் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தக் கயவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இணைய உலகில் இவர்களை அடையாளம் காட்டும் சிறந்த பணியை சில நல்லோர்கள் செய்து வருகின்றனர். இருந்தாலும் உண்மை வீட்டை விட்டுப் புறப்படுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி விட்டு வந்து விடும் என்று சொல்வதைப் போல் இந்தக் கயவர்களின் கைவரிசையில் உருவான கள்ள இணைய தளங்கள் அழகான பொய்களுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை இணைய தளங்களைப் பார்வையிடும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும் உணர்ந்து அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் தங்களை மறைத்துக் கொண்டாலும் பத்திரிக்கைள் மற்றுத் தொலைக் காட்சி ஊடகங்களில் வெகு விரைவில் இவர்களின் முகத்திகை; கிழிந்து விடும், ஆனால் இந்த இணைய தளம் என்னும் ஊடகத்தில் தங்களை மறைத்துக் கொண்டு கபட நாடகம் ஆடும் கயவர்களைக் கண்டறிவது சற்று சிரமம். எனவே தான் நேருக்கு நேர் மோதத் திராணியற்றவர்கள் இணையத்தின் மூலம் புறமுதுகில் குத்தும் கோழைத்தனமான செயவ்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இணைய தளங்கள் உண்மையிலேயே இஸ்லாமிய இணைய தளங்கள் தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அத்தளங்களைப் பார்வையிட வேண்டும். இல்லையேல் நமது பொன்னான நேரமும் பொருளும் விரயம் ஆவது மட்டுமின்றி இருக்கின்ற ஈமானையும் இழக்க நேரிடும்.

பொதுவாகவே இணைய தளங்களை உருவாக்குவதும் அதனைத் தொடர்ந்து நடத்துவதும் அனைவராலும் இயலாத ஒன்று. சமுதாய இயக்கங்கள் அல்லது சேவை மனப்பான்மைக் கொண்ட சிலர் குழுக்களாகச் சேர்ந்து இணைய தளங்களை நடத்தி வருகின்றனர். அத்தகைய புகழ் பெற்ற இணைய தளங்கள் மட்டுமே சரியான தகவல்களை தந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும்.இஸ்லாமியத் தமிழ் இணைய தளங்கள்; சில சமயம் தங்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது வருந்தத்தக்க விஷயமாகும். அப்படிப்பட்ட இணைய தளங்களைப் பார்வையிடும்போது அதில் உள்ள நல்லவற்றை எடுத்தக் கொண்டு அல்லவற்தை; தள்ளிவிடலாம்.
புகழ் பெற்ற அந்த இணைய தளங்களை நடத்துவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தயவு செய்து தனிமனித விமரிசனங்களையும் தரம் கெட்ட தாக்குதல்களையும் சற்று ஒதுக்கிவைத்து விட்டு சமுதாயத்திற்குப் பயனுள்ள செய்திகளை, மார்க்க விஷயங்களை, இறை வேத வரிகளை, இறைத்தூதர் மொழிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்லுங்கள். ஏகத்துவக் கொள்கையை இன்னும் உரத்த குரலில் முழங்குங்கள். எதிர்கால சமுதாயம் இதன் மூலம் பயனடையும். பயனைடந்த உள்ளங்கள் உங்களை மனமார வாழ்த்தும்.

இணைய தளங்கள் என்னும் வலைத் தளங்களின் ஓர் அங்கம் தான் வலைப் பதிவுகள் எனப்பும் வலைப்பூக்கள். பல நிறுவனங்கள் இந்த வலைப்பதிவு சேவையை இலவசமாகவே வழங்குவதாலும், கையாள்வது எளிது என்பதாலும் இணைய உலகில் தொடர்புடைய ஏராளமானேர் வலைப்பதிவுகனை உருவாக்கி தங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பதிந்து வருகின்றனர்.

வலைத் தளங்களை விட அதிகமாகவே இந்த வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் இணைய உலகில் உலாவந்துக் கொண்டிருக்கின்றனவோ எனக் கருதும் அளவுக்கு நாளுக்கு நாள் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.

வலைத்தளங்களை நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போல் அதை விடவும் சற்று அதிகமாகவே வலைப்பூக்களையும் நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன எனலாம். வலைத்தளங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துமே இந்த வலைப்பூக்களுக்கும் பொருந்தும்.

முறையாகப் பதியப்பட்டு நெறிமுறையுடன் நடத்தப்படும் இணைய தளங்களில் தங்கள் மூக்கை நுழைக்க முடியாத முகவரியற்றவர்கள் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி தங்கள் வக்கிர எண்ணங்களையும் தரம் கெட்ட தகவல்களையும் பதிந்து வருகின்றனர்.

வலைப்பதிவுகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் இல்லாததையம் பொல்லாததையும் பதிக்கின்ற வலைப்பதிவுகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு புறக்கணிக்க வேண்டும்.

இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் பதியப்படும் வலைப்பதிவுகள் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் தானோ என நினைக்கும் அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகள் இணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற வலைத் திரட்டிகளில் சென்று பார்வையிட்டால் நாள் தோறும் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கும் உதவாதவை என்பது வேறு விஷயம். பூக்களை நேசிப்பவர்களே நறுமணம் கமழும் நல்ல பூக்களை மட்டுமே நேசியுங்கள். ஆம் நல்ல வலைப் பதிவுகளைத் தேடிப் பிடித்து பயன் பெறுங்கள்.

இணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கும் தமிழ் நேய நெஞ்சங்களே! மிகவும் கவனமாக இருங்கள். நமது எதிரிகள் நம் மீது பன் முனைத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள். 'இஸ்லாம்' 'முஸ்லிம்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைப் பதிவுகளை உருவாக்கி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுதும் எழுத்துக்கள் ஒரு புறம், மறுமொழி இடுகின்ற வசதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய வலைப்பதிவுகளில் முஸ்லிம் பெயர்களில் நச்சுக் கருத்துக்களைப் புகுத்தும் சதி வேலைகள் மறுபுறம், இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் நம்மைத் தாக்க எதிரிகள் திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். எனவே வலைப் பதிவுகளை உருவாக்கி பதிப்பவர்கள் உங்கள் பதிவுகளில் பதியப்படும் மறுமொழிகளை ஆய்வு செய்து வெளியிடும் வசதியைப் பயன்படுத்துங்கள் இல்லையேல் தறுதலைகள் தவறான கருத்துக்களை உங்கள் பதிவுகளில் பதிந்து விடுவர் எச்சரிக்கை.

தமிழறிந்த முஸ்லிம்களில் பலர் பல்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளை பதிக்கின்றனர். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், இவர்களில் சிலர் தமக்கு வேண்டாத, தமக்குப் பிடிக்காத, கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட, தனி நபர்களையும், இயக்கங்களையும் விமர்சித்தும் புழுதி வாரித்தூற்றியும் பதிவுகள் பதிக்கின்றனர்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று நாலாந்தர நரகல் நடையில், படிப்பவர்கள் வெறுப்படையும் விதத்தில் பதிக்கின்ற பதிவுகளைக் காணும் போது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உண்மையில் இவர்கள் முஸ்லிம்கள் தானா? என்று சந்தேகம் வருகின்றது. மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் வலைப்பதிவுகளை நோக்கி நாம் பயணித்தால் நம்மை நரகப் படு குழி நோக்கி கொண்டு சேர்க்கும் வேலையை சில வலைப்பதிவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய வலைப் பதிவுகள் நல்லவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. தனி மனிதத் தாக்குதல் நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாகிய இந்த முனாபிக்குகள் உண்மையான மூமின்களாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

வலைப்பதிவுகளை உருவாக்கி பதிந்து வரும் சகோதார்களே! உங்கள் இறையச்சம் எங்கே போனது? உங்கள் இஸ்லாமியப் பண்பாடும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நற்குணங்களும் எங்கே போயின? பித்னாக்களைப் பரப்பும் உங்கள் முயற்சிகளை ஓரங்கட்டி விட்டு இனியாவது இஸ்லாத்தைப் பரப்பும் வேலையில் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுங்கள். இஸ்லாம் சென்றடையாத இதயங்களில் இஸ்லாத்தைக் கொண்டு சேர்க்க உங்கள் பதிவுகள் பயன்படட்டும். உண்மை இஸ்லாத்தை உணராத முஸ்லிம்களுக்கு உங்கள் பதிவுகள் வழிகாட்டட்டும்.

மூமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.(பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

உங்கள் சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் வீரும்புவீர்களா, தினந்தோறும் உங்கள் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த இறைவசனம் எப்படி உங்களுக்குத் தெரியாமற் போனது?

நீங்கள் பதியும் தனிமனிதக் குறைகள் உண்மையிலேயே உங்களால் விமர்சிக்கப்படும் நபர்களிடம் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களைத் திருத்துங்கள். அதற்கு மேலும் அவர்கள் திருந்தவில்லையென்றால் இனி அவர்களாகட்டும் இறைவனாகட்டும். அதைவிட்டு விட்டு, நீங்கள் மென்மேலும் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டும், சமுதாயத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டும்; இருக்காதீர்கள். அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 5:64)

இணையத்தின் இன்னொரு சிறப்பம்சம் மின்னஞ்சல் வசதி. தொலைபேசி உபயோகம் பரவலாக வந்துவிட்ட பின்னர் பொதுவாகவே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டாலும் மின்னஞ்சல் உபயோகம் வெகுவாக வளர்ந்து விட்டது. தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இணைய உபயோகிப்பாளர்கள் மின்னஞ்சல் வசதியை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவான மற்றும் சமுதாயச் செய்திகளையும் திருமறை வசனங்களையும் நபி மொழிகளையும் பயனுள்ள கட்டுரைகளையும் ஒருவருக் கொருவர் அனுப்பியும் பெற்றும் பயனடைகின்றனர். பயனுள்ள பல செய்திகளுக்காக இந்த மின்னஞ்சல் வசதி பயன்படுத்தப்பட்டாலும் சில சமயம் சில வழிகேடர்களால் இது தவறான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுபவது வேதனைக்குரியது.

முகம் காணா நண்பர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் பயனுள்ள பல செய்திகளைத் தாங்கி வந்தாலும் சில மின்னஞ்சல்கள் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைச் செய்திகளையும் தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் பரப்பிய அவதூறுகளும் அசிங்கங்களும் போதாதென்று சில முனாபிக்குகள் மின்னஞ்சல் மூலமாகவும் பித்னாக்களை பரப்புவதை தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தான் வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை உபயோகிப்பாளர்கள் பலரின், நேரத்தை வீணடித்து, மனதைப் புண்படுத்தி பொருளாதாரத்தைப் பாழ்படுத்தி வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.

முழுக்க முழுக்க புறம் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி இறைப்பதையும் தமது முழுநேரத் தொழிலாகக் கொண்ட சிலர் அனுப்பும் மின்னஞ்சல்களில் தப்பித்தவறி கூட நல்ல செய்திகள் இடம் பெறாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். தன் சொந்த சகோதரனின் மாமிசத்தை தான் புசித்தது போதாதென்று மற்றவர்களும் புசிக்க பங்கு வைக்கின்றனர்.

சர்வசாதாரணமாகப் புறம் பேசித்திரியும் சகோதரர்களே கீழ்க்காணும் நபி மொழியை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லி விட்டு, இருப்பினும் (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் :புகாரி பாகம் 1 எண் 218)

இப்போதும் கப்ருகளில் பச்சை மட்டையை வைப்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளாமல், கப்ரில் வேதனை நடப்பதற்கு அண்ணல் நபி (ஸல்) கூறிய இரண்டு காரணங்களில் ஒன்றாகிய புறம் பேசித்திரிபவருக்குக் கிடைக்கும் தண்டணைக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்துங்கள்.

இணைய தளங்களில் அதிகம் உலாவரும் வாய்ப்பும் வசதியும் கொண்டவர்களே! உங்கள் பொன்னான நேரத்தை வீணாகக் கழிக்காமல், நித்திய வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டி உங்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் இஸ்லாமிய இணைய தளங்களை பார்வையிடுங்கள்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமிக்க எழுத்தாளர்களே! சொந்தமாக வலைப் பதிவுகளை உருவாக்கி சமுதாயம் பயன் பெறத்தக்க உங்கள் ஆக்கங்களைப் பதியுங்கள். உங்களைக் கொண்டு ஒருவர் நேர்வழி பெற்றாலும் அதற்கான உயர்ந்த கூலி இறைவனிடம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
உருவாக்கும் இலவச சேவையை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன. நீங்கள் வழக்கமாகப் பார்வையிடும் வலைப்பதிவுகளின் மேற்பகுதியில் (கிரியேட் பிளாக்) என்னும் பகுதியை சொடுக்கினால் மிகச் சுலபமாக உங்கள் பெயரில் சொந்த வலைப்பதிவை உருவாக்கலாம். வலைப்பதிவுகளை எளிதாக உருவாக்கும் வழிமுறைகளை மேற்கண்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகள் மூலம் அறியலாம்.
உங்கள் வலைப்பதிவுகளை புகழ் பெற்ற வலைப்பதிவுத் திரட்டிகளில் பதிந்துக் கொள்ளுங்கள், இலகுவாக எவ்லோரையும் உங்கள் பதிவுகள் சென்றடையும். பதிவுகளில் எழுதும் போது பலருக்கும் உபயோகமான நல்ல கருத்துக்களை மட்டுமே எழுதுங்கள்.

பல்வேறு வலைப் பதிவுகளைப் பார்வையிட நேரிட்டால் அவற்றில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமக் கருத்துக்களைக் காணும்போது உடனுக்குடன் அதற்குப் பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் இடும்போது நாகரீகத்தையும் நளினத்தையும் கடைப்பிடியுங்கள். அறியாமையாலும் இஸ்லாத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துக் கொள்ளாததாலும் சிலர் தவறாக எழுதக்கூடும். மென்மையான அணுகுமுறை அவர்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தும்.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே அறியாமை இருளகற்றி அல்லாஹ்வின் திருமறையையும் அவனது திருத்தூதரின் வழிமுறைகளையும் தெளிவாகப் புரியவைப்போம். அழைப்புப் பணிக்கு இந்த இணையம் என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தி இனிய இஸ்லாத்தை இகமெங்கும் எடுத்துச் செல்வோம். சகோதர சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களைக் களைந்து உண்மை இஸ்லாத்தை உலகறிய எடுத்துரைப்போம். அஞ்ஞானம் என்னும் இருள் கவ்விக் கிடக்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இணையம் என்னும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி வைப்போம். சத்திய மார்க்கம் இஸ்லாம் சகல உலகையும் சரியான வழி நடத்தும் இன்ஷா அல்லாஹ்.
 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.