Sunday, December 27, 2009

கதையல்ல நிஜம்-1

பெருநாள் தொழுகை முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் பள்ளிவாசலிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அவசரமாகப் புறப்பட்டுவிட்டனா. தள்ளாத வயதில் அந்த முதியவர் நிதானமாக கடைசியாகப் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்.பள்ளிக்கு வெளியே ஒரு இளைஞன் அந்த முதியவருக்குப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக் காத்து நிற்கிறான்.. வெளியில் வந்த முதியவருக்கு கை கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறுகிறான் பதிலுக்கப் பெரியவரும் அந்த இளைஞனுக்குப் பெருநாள் வாழ்த்துத தெரிவிக்கிறார்.. இளைஞன் புறப்படத் தயாராகும் போது அந்தப் பெரியவர் இளைஞனிடம் 'தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

ஒரு சின்ன பிளாஷ் பேக்

அந்த ஊரில் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் அந்த முதியவர் பல் வருடங்களுக்கு முன்னர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியவா என்பதால் ஊர் மக்கள் அனைவராலும் 'ஹாஜியார்' என்றே அழைக்கப்பட்டார். மிகவும் கண்ணியமானவர். தொழுகை இபாதத்துகளில் மிகவும் பேணுதலானவர்.. அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர். ஹாஜியார் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட அம்முதியவரின் இயற் பெயர் குலாம் மைதீன்.

சென்ற வாரம் அந்த இளைஞன் அம்முதியவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தான். 'தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். தாங்கள் தவறாக நினைக்க் மாட்டீர்களே! என்று அந்த இளைஞன் பீடிகையுடன் தம் பேச்சைத் துவங்கினான்.. அதற்கு அம்முதியவா 'தம்பி தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யார் சொன்னாலும் நல்லதை நான் ஏற்றுக் கொள்வேன் எனது தவறுகளைத் திருத்திக் கொள்வேன்' .என்றார்.

தங்கள் பெயர் தவறாக உள்ளது. குலாம் மைதீன் என்றால் மைதீன் எனப்பேச்சு வழக்கில் சொல்லப்படும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)அவர்களின் (சேவகன்) அடிமை என்று பொருளாகிறது. நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் அல்லவா? எனக்கேட்டான்.. அதற்கு அம்முதியவர் கோபப்படாமல் மிகவும் நிதானமாக 'தமபி! தாங்கள் சொல்வது நியாயம் தான். இப் பெயர் எனது பெற்றோர் எனக்கு சூட்டிய பெயர். இதில் எனது தவறு எதுவுமில்லையே! எனது தவறு என்றால் நான் திருத்திக் கொள்வேன். அறியாமையால் எனது பெற்றோர் இப்படிப் பெயர் வைத்து விட்டனர். அல்லாஹ் அவர்களின் குற்றத்தை மன்னிக்க வேண்டும். நான் எனது பெயரை இனி மாற்றிக் கொள்கிறேன். தாங்களே ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து எனக்குச் சொல்லுங்கள்" எனக் கூறவே அந்த உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று தான் அந்த இளைஞன் அம்முதியவரைச் சந்திக்கிறான். அது பற்றித்தான் அம்முதியவா அவ்விளைஞனிடம் வினவுகிறார். .தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

அந்த இளைஞன். 'தாங்கள் என்னை விட அதிகம் அறிநதவர் இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லவே அம்முதியவர் அப்படியானால் 'தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பெயரை நான் வைத்துக் கொள்ள தாங்கள் அனுமதி தருவீர்களா? எனக்கேட்க 'தங்கள் விருப்பப்படி வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எநத ஆட்சேபனையும் இல்லை என்று சொல்ல, உடனே அந்த முதியவர் 'சரி அப்படியானால் இன்று முதல் இந்த நேரம் முதல் எனது பெயர் குலாம் மைதீன் அல்ல இனி நான் அப்துஸ்ஸலாம்.என அழைக்கப்படுவேன். இது எனக்கும் தங்களுக்கும் தெரியும். இதற்கு அல்லாஹ்வே சாட்சி என்றார்கள். ஒரு அருமையான பெயர் சூட்டு விழா அழகாக நடந்தேறியது.

முதியவரிடம் விடைபெற்ற அந்த இளைஞன் பள்ளிவாசலிலிருந்து மிக அருகிலிருக்கும் தன் வீட்டுக்கு சென்றடைந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளிவாசலை நோக்கி சிலர் வேகமாக ஓடுவது தெரிந்து 'என்ன?" என்று விசாரித்தபோது 'பள்ளிவாசல் திண்ணையில் ஹாஜியார் அவாகள் இறந்து விட்டார்கள்'' என்னும் செய்தி அந்த இளைஞனை அதிர்ச்சியுறச் செய்தது

அந்த இளைஞன் ஹாஜியாரைச் சந்தித்து உரையாடியதற்கும் ஹாஜியாரின் மரணச் செய்தியை இளைஞன் செவியுற்றதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவு. ஹாஜியார் கடைசியாகப் பேசியது அந்த இளைஞனிடம் தான். கடைசியாகப் பேசிய வார்த்தைகள் 'இனி இந்த நேரம் முதல் நான் அப்துஸ்ஸலாம் என அழைக்கப்படுவேன். இதற்கு அல்லாஹ்வே சாட்சி" இந்த இனிய வார்ததைகளுடன் ஒரு இறைநேசரின் ஆன்மா பிரிந்து விட்டது.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

உறவுகளையும் ஊர் மக்களையும் பொறுத்தவரை குலாம் மைதீன் ஹாஜியார் ஆனால் அந்த இளைஞனையும் அல்லாஹ்வையும் பொறுத்தவரை அப்துஸ்ஸலாம் என்னும் ஒரு நல்லடியார் இறந்து விட்டார். அனைத்து வகையிலும் நமக்குத் தெரிந்தவரை ஒரு நல்ல இறைநேசராக வாழ்ந்த அம்முதியவரிடம் இருந்த ஒரு குறையைக்கூட அல்லாஹ் இறுதி நேரத்தில் நிவாத்தி செய்து விட்டான்.

இது கதையல்ல நிஜம்

இச்சம்பவம் நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த மறக்கமுடியாத நினைவு மட்டும் அந்த இளைஞனின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது அந்த நல்ல இறைநேசரை இன்றளவும் அந்த இளைஞன் நினைவு கூர்கிறான். அந்த அற்புத நினைவை இன்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறான்.

ஆம் அந்த இளைஞன் அப்துஸ்ஸலாம் என்னும் நான்.

மரணிப்பதற்குச் சற்றுமுன் வரை குலாம் மைதீனாக இருந்து இறுதி நேரத்தில் தம் பெரை மாற்றிக் கொண்ட அப்துஸ்ஸலாம் என்னும் அந்த முதியவர், 'சாந்திவளாகம்' மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வஹாப்ஜி என்கிற அப்துல் வஹாப் அவர்களின் தந்தையும், பெரம்பலூர் சர்க்கார் சில்க ஹவுஸ் உரிமையாளர் ஹாமீம் அவர்களின் பாட்டனாரும் ஆவார்.
இது கதையல்ல நிஜம்

Monday, November 30, 2009

மாபெரும் மேதை மறைந்து விட்டார்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
ஓர் அறிவுச் சுரங்கத்தின் வாயிற் கதவு அடைபட்டுப்போனது. ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் தமது  நெடுங்கதவை மூடிக் கொண்டது. மேலத்திருப்பூந்துருத்தி ஈன்ற மேன்மை மிகு அறிஞர் விடை பெற்றுக் கொண்டார். ஆம் மேதகு முஹம்மது இப்ராஹீம் பி காம் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்.
பட்டப் படிப்பு படித்தவர் பலகோடி. பட்டமே பெயராக அமைந்தது நமக்குத் தெரிந்து இவர் ஒருவருக்குத் தான். பி காம் பயின்றவர்கள் உலகில் அநேகம் பேர் இருக்கலாம்.ஆனால் பி காம் என்றால் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் படிப்பறிவில்லாதவர் கூட பட்டென்று இவரைத்தான்  அடையாளம் காட்டுவர்.  இவர் பயின்ற கல்லூரி இவருக்கு பிகாம் என்னும் பட்டத்தைத் தந்தது. எங்கள் ஊர்   இவர் பெற்ற பட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அந்தப் பட்டத்தையே இவருக்கு பெயராகச் சூட்டியது.
மேலத்திருப்பூந்துருத்தி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகனை வகித்து ஊருக்கும் சமுதாயத்திற்கும் அளப்பெரும் தொண்டாற்றியவர்.
பதவியில் இருந்த போதும் சரி அனைத்து பதவிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விலகி இருந்த போதும் சரி, ஊருக்கு வருகின்ற அறிஞர்கள் யாராக இருந்தாலும் அவர் எம்மதத்தவராயினும் எத்துறையினராயிரும் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை.
சமுதாய மேடையானாலும் சன்மார்க்க மேடையானாலும் இவர் எழுந்து நின்று பேச ஆரம்பித்தால் அனைவரின் செவிகளும் கூர்மையாக இவர் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விடும். தெளிந்த நீரோடையைப் போன்ற தெளிவான பேச்சு, கொஞ்சமும் பிசிறில்லாத குரல் வளம், குற்றால அருவியென கொட்டுகிற கருத்துக்கள்,   அள்ளி அள்ளி வழங்கும் புள்ளி விபரங்கள், சொல்லுகின்ற செய்தி எதுவானாலும் அதனைக் கோர்வையாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லும் அற்புத ஆற்றல்.
பள்ளிவாசலில் நடைபெறும் மாநாடுகளாகட்டும், மீலாது விழா மேடைகளாகட்டும், பொதுக் கூட்ட மேடைகளாகட்டும், இவர் எழுந்து பேச ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கேட்பவருக்கு அலுப்புத் தட்டாது. கடந்த நிகழ்வுகள், நிகழ்காலசம்பவங்கள்,எதிர்காலத்  திட்டங்கள் இப்படி எதைச் சொன்னாலும் தெளிவான ஆதாரங்கள்  மற்றும்   சரியான புள்ளி விபரங்களுடன் கூறுவார்.                                                 
அறிவுத்தேடல் உள்ள எவரும் இவருடன் அமர்ந்து அரை மணி நேரம் உரையாடினால் போதும் அறிவுச் சுரங்கத்திலிருந்து  நிறைய அள்ளிக் கொண்டு வரலாம்.
அரசியல் அறிவியல் வரலாறு இலக்கியம் ஆன்மீகம் என்று இவர் தொட்டுப் பேசாத துறையே இல்லை எனலாம். இவர் போன்ற சகலகலா வல்லவர்களை நம் சமகாலத்தில் காண்பதரிது.
மதங்களைக் கடந்த மனித நேய மாண்பாளர். அதனால்தான் மாற்றுக் கருத்துடைய பிற மதத்தவர் கூட மரியாதை நிமித்தம் அடிக்கடி இவரைச் சந்தித்து அளவளாவிச் செல்வதில் அகமகிழ்வு கொள்வர்.
இஸ்லாமிய ஆன்மீகத்தில் அளப்பெரும் ஈடுபாடு கொண்டவர். முஸ்லிம் அறிஞர்கள் கூட தெரிந்து வைத்திராத மார்க்கச் சட்ட நுணுக்கங்கள் இவருக்கு அத்துபடி. அதுபோலவே ஒரு சராசரி இந்துவைவிட அதிகமாக இந்து மத்தைப் பற்றியும் ஒரு சராசரி கிறிஸ்தவரை விட அதிகமாக கிறஸ்தவ மதத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருந்த ஞானி.
தமக்கென தனியாக ஒரு அலுவலகம் அமைத்துக் கொண்டு, அலுவலத்திலேயே ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொண்டு,ஆன்மீகம் மற்றும் பொது அறிவு நூல்களை தம்மைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொண்டு அழகாக அமர்ந்திருப்பார். இவரது மேசை மீது எப்போதும் ஏதாவது ஒரு நூல் விரித்து வைக்கப்பட்டிருக்கும்.
இவரைக்  காண இவருடைய அலுவலகத்துக்கு எப்போது சென்றாலும் யாராவது முக்கியஸ்தர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். முக்கியஸ்தர்கள் உரையாடும்போது நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்று நாசூக்காக நான் நகர்ந்தாலும் என்னையும் அமரச் செய்து அளவளாவுவார்.
இவருடைய அறிவாற்றலுக்கும் தகுதிக்கும் வயதுக்கும் நான் சமமானவன் அல்ல என்ற போதிலும் மற்றவர்களுடன் சேர்த்து என்னையும் அமரச் செய்து எனக்கு கண்ணியம் அளித்தவர். எங்கள் உரையாடலுக்கு மத்தியில் யாரேனும் பெரிய மனிதர்கள் வந்து விட்டால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து எனக்கு கௌரவம் அளித்ததை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.
 சில தினங்கள் நான் போகாவிட்டால் கூப்பிட்டனுப்புவார். “உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாருங்கள்  உங்களிடம் நிறைய பேசவேண்டும்” என்று அவர் சொன்ன போது நான் மெய் மறந்து போனேன். ஒரு சாதாரணமானவனாகிய எனக்கு அவர் அளித்த முக்கியத்துவம் அவர் மீது எனக்கிருந்த மரியாதையை மேலும் அதிகப்படுத்தியது.
சில பிரபல மார்க்க அறிஞர்களை எனது வெளியூர்ப் பயணங்களில் சந்திக்கும்போது எனது ஊரைச் சொல்லி என அறிமுகம் செய்து கொண்டால் அவர்கள் முதலில் விசாரிப்பது இவரைப் பற்றித்தானிருக்கும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவருடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்கின்றனஇவரிடமிருந்து நான் பெற்ற பொது அறிவுப் பொக்கிஷங்கள் ஏராளம். ஆயிரமாயிரம் விஷயங்களை அறிந்து வைத்திருந்த இவர் பேசும் போது கவனமுடன் எனது மனக்குறிப்பேட்டில்  பதிவு செய்து கொள்வேன். என் வீட்டுக்குச் சென்றவுடன் மறக்காமல்  எழுதி வைத்துக் கொள்வேன்.
எங்கள் உரையாடலுக்கிடையே  நான் சொல்லும் சில கருத்துக்களைக் கூட  பொறுமையுடன் கேட்டு எனது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார். இத்தகைய பெருந்தன்மை எல்லோருக்கும் வராது.
ஒரு முறை நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு நூலில் நான் படித்த ஒரு பேரறிஞரின் கூற்றை பகிர்ந்து கொண்டேன்.
ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தான் என்பதற்கு ஆதாரம், அவன் ஒரு நூல் எழுதியிருக்க வேண்டும்ஒரு வீடு கட்டியிருக்க வேண்டும்ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிருக்கவேண்டும். இவை தான் அந்த மனிதன் மறைந்த பின்னும் அவன் பெயர் நிலைக்க காரணமாக அமையும்
எப்போதோ ஏதோ ஒரு நூலில் படித்த இந்தக் கருத்தை இவரிடம் நான் பகிர்ந்து கொண்ட போது யதார்த்தமாகத் தான் எடுத்து வைத்தேன். ஆனால் இதைச் சொன்ன மறு நிமிடமே இவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
நீங்கள் இவை மூன்றையும் செய்து விட்டீர்கள். ஆனால் நான் இரண்டைத்தானே செய்துள்ளேன். நான் நூல் எதுவும் எழுதவில்லையே. அப்படியானால் அதையும் செய்து விடட்டுமா?” என்று இந்தப் பேரறிஞர் சொன்ன போது எனக்கு மெய்சிலிர்த்தது. அப்போது உருவானது தான்திருக்குர்ஆனில் சில தேன் துளிகள்என்னும் இவரது நூல்
திருக்குர்ஆன் குறித்து இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் திரட்டி வைத்திருந்த குறிப்புகளை என்னிடம் தந்து, இவற்றை கோர்வையாக்கி நூல் வடிவில் தொகுத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் தொகுத்து வழங்கிய  திருக்குர்ஆனில் சில தேன் துளிகள்  அந்த நூலுக்கு என்னை ஒரு மதிப்புரையும் எழுதச் சொன்னார். எனது மதிப்புரைக்கு மதிப்பளித்து முன் பக்கத்தில் இடம் பெறச்செய்து என்னை கௌரவித்தார். அந்நூலின் மதிப்புரையில் நான் குறிப்பிட்டது போல் இவரது இதய சிம்மாசனத்தில் எனக்கொரு இடம் அளித்ததற்காக மனம் நெகிழ்ந்து போனேன்.
சமீப காலங்களில் நான் எழுதிய பல்வேறு ஆக்கங்களுக்கு நான் பெற்ற கரு இவருடன் உரையாடும் போது நான் பெற்றவை தான் என்பதை நன்றியுடன் இங்கே நினைவு கூர்ந்தாக வேண்டும்.
எமது ஒவ்வொரு விடுமுறையிலும் தாயகம் வரும்போது அடிக்கடி இவரது அலுவலகம் சென்று பேசிக் கொண்டிருப்பேன். பொதுஅறிவு, ஆன்மீகம், இயக்கங்கள், கொள்கைகள் இப்படி அனைத்து வகையான கலவையாக எங்கள் உரையாடல் அமையும்.ஆனால் இம்முறை எங்கள் உரையாடல் அனைத்தும் ஆன்மீகம் பற்றியதாகவே மட்டும் இருந்தது. மற்ற விஷயங்கள் குறித்தெல்லாம் பேச இப்போது மனம் விரும்பவில்லை என்றார்கள். அவர்களுடான எனது இந்த இறுதிக் கட்டச் சந்திப்புகளில், இஸ்லாமிய  வணக்க வழிபாடுகள், மார்க்கக் கடமைகள்,  ஆகியன பற்றி மட்டுமே எங்கள் உரையாடல்கள் இருந்தன. மற்றவைகளிலிருந்து மனதளவில் ஒதுங்கி விட்டார்கள்.
எனது பாட்டனார் அப்துஸ்ஸலாம் சாஹிப் அவர்கள் திருக்குர்ஆனை  பாரசீக மொழியில் மொழி பெயர்த்துள்ள விபரம் குறித்து இவரிடம் சொன்ன போது அதை எடுத்த வரச் சொல்லி தம் கரங்களில் வாங்கி, பக்கம் பக்கமாகப் புரட்டிப்பார்த்து  வியந்தார்கள்எனது பாட்டனார் அப்துஸ்ஸலாம் சாஹிப் அவர்கள் குறித்து மிகவும் சிலாகித்து பேசியவர் இந்த ஊர் இத்தகைய பேரறிஞர்களை யெல்லாம் பெற்றுள்ளதே என்று போற்றினார்கள். இந்த குர்ஆன் கையெழுத்துப் பிரதியை மிகவும் பத்திரமாகப் பேணிப் பாதுகாக்கும்படியும், இதனைப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளும்படியும் அறிவுரை கூறினார்கள்.
தமது முன்னோர்களில் தமக்குத் தெரிந்த அனைவரின் பெயரையும் பட்டியல் தயாரித்து அவர்கள் அனைவருக்காகவும் அடிக்கடி தாம் துஆ செய்து கொண்டிருப்பதாகச் சொல்லி அந்தப் பட்டியலை என்னிடம் காண்பித்தார்கள். அப்போதே எனது பாட்டனார் பெயரையும் அந்தப் பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.
ஏற்கனவே நான் உருவாக்கிய எனது குடும்பத்தாரின் வம்சாவழிப் பட்டியல் ஒன்றை இவரிடம் காண்பித்திருந்தேன். அதனைப் பின்பற்றி தாமும் தமது குடும்பத்தாரின் வம்சாவழிப் பட்டியல் ஒன்றை உருவாக்கி யிருப்பதாகவும் தம்முடைய உறவினர்கள் அனைவருக்கும் அதனைப் பிரதி எடுத்து கொடுத்திருப்பதாகவும் சொன்னார்கள். எங்கள் வம்சாவழிப் பட்டியலை நான் உருவாக்குதற்கு நீங்கள் தான் மூல காரணம்” என்று அவர்கள் என்னிடம் சொன்ன போது அந்தப் பெரிய மனிதரின் வஞ்சகமில்லாப் புகழ்ச்சி என்னை நெகிழச் செய்தது.
        அடிக்கடி என்னிடம் திருக்குர்ஆன் விரிவுரைகள் ஹதீஸ் தொகுப்பு நூல்கள் எதையேனும் குறிப்பிட்டுக் கேட்பார்கள். நானும் என்னிடம் உள்ள  பல்வேறு நூல்கனள படிக்கக் கொடுத்திருக்கிறேன். “தாங்கள் ஆர அமரப் படித்து விட்டு பிறகு தந்தால் போதும்“ என்பேன். அந்த பெரும் பெரும் நூல்களை யெல்லாம் முழுவதுமாகப் படித்து முடித்திருக்கிறார்கள் என்பதை, மறுமுறை சந்திக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் அவர்கள் குறிப் பெடுத்து வைத்திருப்பதைக் கொண்டு புரிந்து கொள்வேன்.
இம்முறை நான் கொடுத்த நூல்களைப்  புரட்டி சில குறிப்புகளை மட்டும் படிக்கச் சொல்லி கேட்டுவிட்டு உடனுக்குடன் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். எதையுமே வைத்துக் கொள்ள வில்லைமுன்பு போல் இப்போது படிக்க முடியவில்லை கண்கள் மறைக்கின்றன“ என்று  சொன்னதுடன் நிறுத்திக் கொள்ள வில்லை, மரணம் நெருங்குகிறது எனவே அடுத்தவர் உடமைகளை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?“ என்று அவர் சொன்ன போது நான் சாதராணமாகத் தான் எடுத்துக் கொண்டேன். தமது அந்திம காலம் நெருங்கிவிட்டதை மனதளவில் அவர்கள் உணர்ந்திருக்கலாம்.
பல வருடங்களாக தமக்கு வந்து கொண்டிருந்த இஸ்லாமிய மாத இதழ்களை வரிசைப்படி அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். இவற்றை இப்படியே வைத்திருப்பதை விட யாருக்காவது கொடுத்தால் படித்துப் பயனடைவார்களே என்று கருதியதாகவும் யாரிடம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தாம் யோசித்த போது முதலில் என்னைத் தான் நினைத்ததாகவும் சொல்லி என்னிடம் தந்தார்கள். நான் எடுத்துச் செல்ல முன்வந்த போதுநீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் ஆள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்என்று சொல்லி ஆள் மூலம் எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
தமது அலுவலத்தில் வந்து அமர இயலாத முதுமையும் இயலாமையும் இவருக்கு ஏற்பட்ட போதும் கூட, அவ்வப்போது காலார நடந்து வந்து சிறிது நேரமேனும் தமது அலுவலகத்தின் வாசற்படிகளை மிதிக்கத் தவறியதில்லை. மூடப்பட்டுவிட்ட அந்த அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இவர் அமர்ந்திருந்த போது எதிர்பாராவிதமாக நான் அவ்வழியே செல்ல, என்னை அன்புடன் அழைத்து தன் தோளின் மீது போட்டிருந்த துண்டை எடுத்து தமக்கருகில் உள்ள இடத்தை தானே சுத்தம் செய்து தமக்குச் சமமாக என்னை அமரச் செய்தார்கள். இத்தகைய உயர்ந்த பண்பாடு உயர்ந்தவர்களிடம் மட்டும் தான் இருக்கும்.
வழக்கம் போல்  பயணம் சொல்லிக் கொள்ள இம்முறை நான் இவர்கள் இல்லம் சென்ற போது தாம் ஓய்வெடுத்துக் கொண்டிக்கும் அறைக்கே என்னை வரச் சொன்னார்கள்.
தமது பல்வேறு குறிப்பேடுகளை எடுத்து என்னிடம் காண்பித்தார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். ஒரு மகனுக்கு தந்தையைப் போல், ஒரு மாணவனுக்கு ஆசிரியரைப் போல், ஒரு சீடனுக்கு ஆசானைப்போல பல்வேறு அறிவுரைகளும் அறவுரைகளும் கூறினார்கள். எவ்வளவோ விஷயங்களைச் சொன்னவர் இறுதியாகஎன் மனதில் தோன்றியதைச் சொன்னேன் உங்கள் விருப்பப்படியும் வசதிப்படியும் செய்து கொள்ளுங்கள்என்று மிகவும் இங்கிதமாக உரைத்தார்கள்.
கடைசியாக விடை பெற்ற போது அவரின் நா தடுமாறியது பேச்சு வரவில்லை. கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர்த் துளிகள். தம் கரங்கள் நடுங்க எனது கரங்களை பற்றிக் கொண்டு  எனக்காக துஆச் செய்யுங்கள்எள்று நா தடுமாற அவர்கள் உரைத்த போது அவர் கண்கள் மட்டுமல்ல எனது கண்களும் குளமாயின.
இன்னும் இன்னும் இவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாதா? இன்னும் இன்னும் இந்த அறிவுப் பேழையிலிருந்து ஆழ்ந்த கருத்துக்களை அள்ளி வந்திருக்கக் கூடாதா? இன்னும் இன்னும் இந்த கல்வி ஞானக் கடலில் மூழ்கி நாம் முத்துக் குளித்திருக்கக் கூடாதா? இது தான் இறுதிச் சந்திப்பு என்பது நமக்கு எப்படித் தெரியும்அது இறைவன் மட்டும் அறிந்த இரகசியம் அல்லவா?
இயலாமை,முதுமை, முதுமைக்குப்பின் மறுபடியும் தொடங்கும் குழந்தைப் பருவம் இவையாவும் இறைவன் வகுத்த நியதி, ஒரு குடும்பத்தலைவராக தமது கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து முடித்து, இறுதியாக எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி அமைதியாக தமது வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த நிலையில் இறைவன் இவர்களை அழைத்துக் கொண்டான். இது இறைவன் இவருக்கு அளித்த நற்பாக்கியம் தான்.
இந்த பி காம் வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என் தந்தையின் வயதொத்த இவர்கள், எனது ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நிகரான அறிவையொத்த இவர்கள்  தமக்குச் சமமாக அமரவைத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை கௌரவித்திருக்கிறார்கள். இந்த மாமேதை எமக்களித்த கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் தனி ஒரு நூலே தொகுத்தாலும் தகும்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அவனியில் யார்க்கும் அஞ்சாத தன்மை கொண்ட அந்த பி காம்,
கணீரென்ற குரலில் தெளிவான உச்சரிப்புடன் சரியான வார்த்தைகளை கவனமுடன் பேசும் அந்த பி காம்,
அறிவு வேட்கை, ஆன்மீகத் தேடல், அறிந்து கொள்ளும் ஆர்வம், இன்னமும் கற்க வேண்டும் என்னும் தணியாத தாகம் இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற அந்த பி காம், நம்மை விட்டுச் சென்று விட்டார். நமதூரின் ஒரு அறிவுச்சுடர் அணைந்து விட்டது.  நமதூரில் பல நூறு பி காம்கள் இனி உருவாகலாம். ஆனால் இப்படி ஒரு  பி காம் கிடைப்பாரா? காலம் தான் பதில் சொல்லும்.
காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். தலைமுறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சிலர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி மறைந்த பிறகும் கூட மக்கள் மனதில் நீங்கா  இடம் பெறுவர். மேலத்திருப்பூந்துருத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மாமனிதர்களில் இந்த மேதைக்கு ஒரு தனி இடம் உண்டு.
இந்த மாபெரும் அறிஞரைப் பற்றி இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம். மறுபடியும் தொடங்கிய துவக்கத்திற்கே வருகிறேன்.
ஓர் அறிவுச் சுரங்கத்தின் வாயிற் கதவு அடைபட்டுப் போனது.ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் தமது  நெடுங்கதவை மூடிக் கொண்டது. மேலத்திருப்பூந்துருத்தி ஈன்ற மேன்மை மிகு அறிஞர் விடை பெற்றுக் கொண்டார். ஆம் மேதகு முஹம்மது இப்ராஹீம் பி காம் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்.
எல்லாம் வல்ல இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வை மகிழ்வாக்கி, மறுமை வாழ்வை சிறப்பாக்கி, நல்லோர்களின் கூட்டத்தில் இவரைச் சேர்த்து வைப்பானாக. நாளை மறுமையில் நல்ல இறை நேசர்களுடன் இவரை எழுப்புவானாக. இம்மை வாழ்வை விடச் சிறந்த மறுமை வாழ்வை இவருக்கு நல்குவானாக. ஆமீன்.
அன்புடன்
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா










 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.